இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது. தொடர் அத்துமீறல்களை வேடிக்கைப் பார்ப்பதா?

19 மார்ச், 2024

                `

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், இதை மத்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் மிகுந்த வேதனையை உண்டாக்குகிறது.

பன்னெடுங்காலமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்தாலும், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 21 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், தமிழக மீனவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர்.

அண்மைக்காலமாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு மாதக் கணக்கில் சிறைத் தண்டனை விதிப்பதும் தொடங்கியுள்ளது. இது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும். கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களது படகுகளை விடுவதில்லை. இதனால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாமல், வாழ்வாதாரம் இழந்து தமிழக மீனவர்கள் பரிதவிக்கின்றனர். 

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டுமென மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பலமுறை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும், பாராமுகமாய் இருப்பது, தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டை உறுதிசெய்கிறது. இந்தப் போக்கு தொடருமானால் மத்திய அரசுக்கு தமிழர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறோம்.

எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை மீட்கவும் மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

-R.பிரதீப்குமார்,
மாநில செயலாளர், மீனவர் அணி,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.