கிராம சபையில் பங்கேற்போம்!
நமது தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் உள்ளாட்சிகளின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று, இதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொடர்ந்து தனிக்கவனம் செலுத்திவருபவர் என்பது நாம் அறிந்ததே. தலைவரின் வலியுறுத்தலைக் களத்தில் செயல்படுத்தும்விதமாக, கடந்த 7 ஆண்டுகளாக கிராமசபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளான நாம் தொடர்ந்து பங்கேற்று வருகிறோம்.
ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று (15.08.2025) தமிழகமெங்கும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், நமது கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் வழக்கம்போல் கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கூட்டத்தில், கிராம மக்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளானது கிராமசபைத் தீர்மானங்களாக நிறைவேற்றப்படுவதற்குத் துணைநிற்க வேண்டியது நமது கடமையாகும். மேலும், கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செயல்பாட்டுக்கு வருவதற்கும் நாம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தலைவர் நமக்கு வகுத்தளித்துள்ள இந்த அணுகுமுறையில் நாம் அனைவரும் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று மக்களின் அடிப்படைத் தேவைகள், பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் துணைநிற்போம்.
சுதந்திர தினத்தன்று (15.08.2025) நடைபெறவுள்ள, கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்கும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், தங்கள் பங்கேற்பு குறித்தான விவரங்களை, புகைப்படங்களுடன் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமை நிலையத்திற்கு (வாட்ஸ்அப் எண்: 9342974726) அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்; மேலும், மாநிலச் செயலாளர்கள், மண்டலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் நமது நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கிராமசபைப் பங்கேற்பை உறுதிப்படுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நன்றி! நாளை நமதே!
ஆ. அருணாச்சலம் M.A., B.L.,
பொதுச்செயலாளர் - மக்கள் நீதி மய்யம்.
கிராம சபையில் பங்கேற்போம்!
14 ஆகஸ்ட், 2025
in அறிக்கைகள்