திராவிடர் கழகப் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு! மக்கள் நீதி மய்யம் கண்டனம்!!
நீட் தேர்வை தடை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட இருந்த பரப்புரைப் பயணத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தேர்தல் அரசியலுக்குள் வராமல் பகுத்தறிவு, சமூகநீதி, பெண் விடுதலை உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைத்து கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து களத்தில் போராடிவரும் தமிழகத்தின் மதிப்பிற்குரிய மக்கள் இயக்கமான திராவிடர் கழகத்தின் சமூகப்பொறுப்புணர்வுமிக்க அறவழிப் பரப்புரைப் பயணத்தைத் தடுப்பது எந்தவகையிலும் நியாயமற்ற செயலாகவே மக்கள் நீதி மய்யம் கருதுகிறது.
மேலும் பேச்சுரிமை, கருத்துரிமை என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளாகும். இந்த உரிமைகளை மறுத்து பரப்புரைக்குத் தடைவிதிப்பது ஜனநாயகத்தை நசுக்கும் செயலாகும். தமிழக அரசானது திராவிடர் கழகப் பரப்புரைப் பயணத்திற்கு விதித்த தடையை நீக்கி உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
செந்தில் ஆறுமுகம்
தலைமை நிலையச் செயலாளர்.
மக்கள் நீதி மய்யம்.
